Translate

Friday 9 February 2018

வெற்றியை உருவாக்கும் எண்ணங்கள்

வியாபாரத்தில் ஜெயித்தவர்கள் பெரும்பாலும் பல தோல்விகளுக்குப் பிறகுதான் தலையெடுத்திருப்பார்கள். குறிப்பாக, முதல் முறையாகத் தொழில் செய்பவர்கள் நிறைய தோல்விகளையும் தடைகளையும் சந்திப்பது இயல்பு.
ஒரு முறை தோல்வி வந்ததும் நம்மால் முடியாது என்று விலகிச் செல்பவர்கள் ஏராளம்.
நம்மைச் சுற்றிப் பார்த்தாலே சொந்தத் தொழில் பரிசோதனையைச் செய்து பார்த்துவிட்டு வந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். தங்களின் தோல்விகள் பற்றி அவர்கள் சொல்லும்போதே அவர்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொள்ளலாம்.
வலிமையான எண்ணங்கள்
“அந்தத் தொழில் மோசமான தொழில், தெரியாம மாட்டிக்கிட்டேன்”, “ கூட்டாளிகளை நம்பி ஏமாந்தேன்!”,
“ நம்ம குணத்துக்கு அந்தத் தொழில் ஆகாது”, “நிலையான வருமானம் இல்லாட்டி ரொம்பக் கஷ்டம்”, “நம்ம குடும்பத்துக்கெல்லாம் பிஸினஸ் ஆகாது”, “இந்த தொழில்னாலே வேறெங்கும் நகர முடியாது. எதுவும் செய்ய முடியாது. இதே கதின்னு கிடக்கணும்!”
நீங்கள் எதை நினைத்தாலும் அதுதான் சரி என்று உணர்த்துவது போல உங்கள் வாழ்க்கையில் அனுபவங்கள் கிடைக்கும். உங்கள் எண்ணத்தைக் கவர்ந்துவரும் மனிதர்களும் சம்பவங்களும் அதைத் தொடர்ந்து நிரூபிப்பார்கள். அதுதான் எண்ணங்களின் வலிமை.
அனுபவத்தால் எண்ணங்கள் தோன்றுவதில்லை. எண்ணத்தால் அனுபவங்கள் தோன்றுகின்றன. தொழிலில் தோற்பவர்கள் 95 சதவீதம். ஜெயிப்பவர்கள் 5 சதவீதம்தான். காரணம் அவர்களின் எண்ணங்கள். அதனால் எடுக்கும் முடிவுகள். அந்த முடிவுகள் தூண்டும் செயல்பாடுகள். அந்தச் செயல்பாட்டின் மூலம் வலிமை பெறும் நேர்மறையான எண்ணங்கள். இந்தச் சுழற்சிதான் வெற்றியை தீர்மானிக்கிறது.
தொழில் செய்வதை, பிடித்த விளையாட்டை விளையாடுவது போல அணுகுபவர்கள் அதை ரசித்துச் செய்வார்கள். விளையாட்டில் வெற்றி தோல்வி எப்படி என்பதை விட, விளையாட்டை விளையாட்டுக்காகவே எப்படி ரசிக்கிறோமோ அப்படித் தொழிலை ரசிக்க வேண்டும். அதுதான் நம்மை அந்தத் தொழிலில் நிலைக்க வைக்கும்.
தோல்வியால் கற்கும் பாடங்கள் நமது தொழில் திறனைக் கூர்மையாக்கும் என்று நம்ப வேண்டும். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதைவிட எப்படி ஜெயிப்பது என்பதைத் தோல்வியில்தான் ஆராய்ந்து கற்க முடியும். பிறரின் தோல்விகளிலிருந்து பாடம் கற்பவர்கள் புத்திசாலிகள்.
தோல்விக் கதைகள்
வெற்றி பெற்றவர்களைப் பார்த்து ஆசை மட்டும் படுவதுதான் இங்கு பிரச்சினையே. அவர்களின் தொழில் திறனைப் புரிந்துகொள்ளாமல் அவர்களின் வெற்றியின் பளபளப்பில் மயங்கிப் போவது. அவர்கள் செய்யும் தொழிலைச் செய்தாலே அதே வெற்றியைப் பெற முடியும் என்று நம்புவது.
“ஒரு ஆன்லைன் சைட் வைத்தே 5 ஆயிரம் கோடி சம்பாதிச்சிட்டாங்க!”, “கோழி முட்டை வியாபாரத்துல இன்னிக்கு ஒரு பன்னாட்டு கம்பெனி மாதிரி வளந்துட்டாங்க!”, “ஒரே படம் எடுத்தாங்க; எங்கேயோ போயிட்டாங்க!”, “சும்மா ஆரம்பிச்சாங்க இந்த பியூட்டி பிஸினஸ. இன்னிக்கு முன்னணி நடிகைங்க எல்லா பிராண்டுகளுக்கும் அம்பாசடர் ஆகும் அளவு வளர்ந்துட்டாங்க!” ,“ஒரே ஒரு ஆப் டெவலப் பண்ணி இன்னிக்கு கம்பனில பெரிய பெரிய முதலீட்டாளர்களைக் கொண்டாந்துட்டாங்க!”...
இதெல்லாம் பனிக்கட்டியின் நுனி போல. ஒவ்வொரு வெற்றிக் கதைக்குப் பின்னும் நூறு மடங்கு தோல்விக் கதைகள் உள்ளன. அவை வெளியே தெரியாது. வெற்றியாளர்கள் பின்னும் ஏராளமான தோல்விக் கதைகள் உண்டு. ஆனால் அதைவிட அவர்கள் வெற்றியின் பிரகாசம் நம் கண்களை மறைக்கும்.
இதுவே ஆதாரம்
தோல்விகளையும் பார்த்து, அதன் பாடங்களைக் கற்று, அதன் பின்னும் அந்த தொழிலை ரசித்துச் செய்ய முடியுமா? அப்படி என்றால் நீங்கள் இந்த தொழிலுக்குத் தயார். தொழில் செய்ய வேண்டும், அதில் தொடர்ந்து பணம் பண்ண வேண்டும், எது வந்தாலும் கற்று மேலே போக வேண்டும் என்ற எண்ணங்கள் கொண்டவர்கள்தான் தொழிலில் வெற்றி பெறுகிறார்கள்.
நேரம், சூழ்நிலை, பிறர் ஆதரவு எல்லாம் தொழிலை பாதிக்கும்தான். உண்மைதான். ஆனால் தொழிலில் நிலைக்க ஆதாரமானது தொழில் பற்றிய எண்ணங்கள்தான்.
அரைக்காசு அரசு வேலை
ஒரு மார்வாடி நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார்: “இந்தத் தொழில் நிலையில்லாதது. பேசாமல் படித்து வேலைக்குப் போகலாம்னு அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அவர் சொன்னார்: ‘ஒரு வேலைக்காரனா இருந்தா யார் உனக்கு பொண்ணு தருவா? சின்னதா இருந்தாலும் உனக்க்குன்னு எப்பவும் ஒரு தொழில் இருக்கணும்!”.
நான் நினைத்துப் பார்த்தேன். ‘அரைக்காசு உத்தியோகம்னாலும் அரசாங்க உத்தியோகம்’ என்பதைக் கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். தெரிந்தவர்கள் எவ்வளவு பெரிய தொழில் பண்ணினாலும், “ஏதோ பிஸினஸ் பிஸினஸ்னு சொல்றாங்க..என்ன வருதோ தெரியலை” என்பார்கள்.
தொழில் பற்றிய நம் எண்ணங்கள் தான் படிப்பு, திருமணம், வாழ்க்கை பற்றிய எண்ணங்களைத் தீர்மானிக்கும். கடனை நிர்வாகம் செய்வது, தொழிலாளிகளை நிர்வாகம் பண்ணுவது, சந்தையை எடை போடுவது, விலையை நிர்ணயம் செய்வது என அனைத்துக்கும் நம் எண்ணங்கள்தான் விதைகள்.
‘வீடு, குடும்பம் எதையும் கவனிக்க நேரமில்லை, எப்பவும் பிஸினஸ் தான்’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். வீடு, குடும்பம் மட்டுமல்ல, பிடித்த எல்லாவற்றையும் செய்ய முடிகிறது இந்த பிசினஸ் வெற்றிகளால் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

பணக்கஷ்டம் தரும் பாடங்கள்

யாருக்கு இல்லை பணம் சம்பாதிக்கும் ஆசை? எல்லோரும் தான் பணம் பண்ண நினைக்கிறார்கள். ஆனால் சிலருக்கு மட்டுமே செல்வம் கொழிக்கிறது. பலருக்கு நிராசையாகத் தானே இருக்கிறது? நினைப்பது தான் நடக்கும் என்றால் எல்லாரும் பணக்காரர்கள் ஆகியிருக்க வேண்டுமே! ஏன் நம்மில் பலருக்கு பணப்பற்றாக்குறை உள்ளது? ஆழ்மனச் சக்தி, அஃபர்மேஷன், நேர்மறை சிந்தனை எல்லாம் வேலை செய்யவில்லையா பண விஷயத்தில்?
இதற்குப் பதில் சொல்வதற்கு முன் பணம் இல்லை என்று குறை சொல்பவர்களைக் கொஞ்சம் அலசலாமா?
பண பயம்
“பணம் என்ன மரத்திலயா காய்க்குது!, “ பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படணும்.” “பணம் வந்தா நிம்மதி போயிடும்”, “ நம்ம ராசி சாண் ஏறுனா முழம் சறுக்கும்”, “பண விஷயத்தில யாரையும் நம்ப முடியாது” “அளவுக்கு அதிகமா ஆசைப்படக்கூடாது”, “ஒரு செலவு போனா அடுத்த செலவு கரெக்ட்டா வந்திரும்” “நம்மளுக்கு கை கொடுக்க ஆளில்லை”, “நமக்கு இதுவே ஜாஸ்தி”, “ஒரு ஜாக்பாட் அடிச்சா எல்லாம் சரியாயிடும்” “கடனைக் கடன் வாங்கித்தான் அடைக்க வேண்டியிருக்கு” - இப்படி அதிகமாக அவர்கள் பேசும் எண்ணங்கள் என்ன என்று கூர்ந்து நோக்குங்கள். காரணம் புரியும்.
பணம் சம்பாதிக்கும் லட்சியத்தை விடப் பணம் பற்றிய பயமும் பேராசையும்தான் தவறான முடிவுகளை எடுக்கவைக்கும்.
தடால் தீர்வு
பணச்சிக்கலில் இருப்பவர்கள் பெரும்பாலும் எந்தப் பணத்தேவையையும் ஏதாவது ஒன்றைத் தடாலெனச் செய்து தீர்க்க நினைப்பார்கள். பணம் தேவையா? எங்காவது கடன் வாங்கு அல்லது அடகு வை அல்லது எதையாவது விற்று ஏற்பாடு பண்ணு. எதையாவது செய்து பணம் புரட்டு. இந்த அவசரமும், எதையும் அலசி ஆராயாமல் எடுக்கும் முடிவுக்குக் காரணமான எண்ணம்: “இதை இப்போது சமாளிக்கலாம். பிறகு வருவதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!” என்பதுதான்.
இந்த எண்ணமும் செயலும் காலம் காலமாய்த் தொடரும். பிறகு இது வாழ்க்கை முறை ஆகும்.
ஒரு நண்பர் சொன்னார்: “எனக்கு வர வேண்டிய கடன் தொகை 16 லட்சம். கொடுக்க வேண்டிய கடன் 12 லட்சம் தான். ஆனால் வர வேண்டியது நேரத்துல வராததால் சொத்தை வச்சு கடன் வாங்கிக் கொடுக்க வேண்டிய கடனை அடைக்கிறேன்..” ரொட்டேஷன் என்பது தமிழ்ச்சொல் போலவே ஆகிவிட்டது. இது நாயர் பிடித்த புலி வால் கதைதான். முதலில் வாங்கிய கடனை அடைக்க இன்னொரு புது ஆளிடம் கடன் வாங்குவது. எந்தக் காலத்திலும் செலவும் குறையாது. கடனும் முடியாது. கடனால் மூழ்கிய குடும்பங்கள் பல எனக்குத் தெரியும்.
பணக் கண்ணோட்டம்
வரவுக்கும் மேலே செலவு செய்வது, தெரியாத தொழிலில் முதலீடு செய்வது, பணம் இல்லை என்பதற்காக எந்தச் செலவையும் குறைத்துக் கொள்ளாதது, எப்படியாவது கடன் வாங்கலாம் என்ற துணிச்சல், தவறான பொருளாதார முடிவுகள் எடுப்பது, பிறர் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது என்று ஏராளமான தவறான முடிவுகளுக்குக் காரணம் பணம் பற்றிய பிசகான எண்ணங்களே. பண ஆசை இருந்தும் பணம் பற்றிய பிழையான எண்ணங்கள் தவறான முடிவுகளையே எடுக்க வைக்கும்.
உலகின் பணம் கொழிக்கும் மக்கள் கூட்டத்தைப் பாருங்கள். அவர்கள் யூதர்களாக இருந்தாலும் சரி, மார்வாடிகளாக இருந்தாலும் சரி, செட்டியார்களாக இருந்தாலும் சரி. அவர்களுக்குப் பணம் பற்றிய சில அடிப்படையான கண்ணோட்டங்கள் உண்டு.
வேலை,தொழில் தரும் பணம்
சிக்கனம் முக்கியம். சின்ன வரவு செலவுக்கும் கணக்கு வேண்டும். உறவு என்றாலும் பண விஷயத்தில் சரியாக இருக்க வேண்டும். வீணான பகட்டுச் செலவை விடக் கையிருப்பு சொத்தே சமூக மதிப்பு. எல்லா வயதிலும் உழைக்க வேண்டும். எளிய வாழ்க்கை வாழ வேண்டும். உத்தரவாதம் தராத தொழில்களில் முதலீடுகள் கூடாது. எல்லாவற்றையும் விட “பணம் சம்பாதிப்பது மிக முக்கியம். அதைத் திறன்படச் செய்வது தான் உயர்வுக்கு வழி” என்பதை உணர்ந்தவர்கள்.
மீட்டர் வட்டி, சீட்டுக்கம்பெனி மோசடி என அனைத்துப் பொருளாதார மோசடிகளிலும் பாதிக்கப்படுபவர்கள் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். “எதையாவது செய்து சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும்” எனும் எண்ணம் தான் அவர்களைப் புதைகுழியில் தள்ளுகிறது.
நல்ல வேலையில், நல்ல தொழிலில்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்று எண்ணுபவர்கள் பணத்தை எண்ணுவதை விட அதன் காரணமான வேலையையும் தொழிலையும் பற்றி அதிகம் எண்ணுவர். தொழில் மேம்படும்போது செல்வம் கொழிக்கும்.
பற்றாக்குறை மனநிலை
பிடித்ததை நம்பிக்கையுடன் செய்யும்போதும் பணம் வரும். இதுதான் உண்மை. பணம் பற்றிய பயம் இல்லாதபோது பணம் வரும். பணம் பற்றிய எண்ணத்துடன் கோபம், வெறுப்பு, பொறாமை போன்றவை உள்ளபோது செல்வம் சேராது.
பற்றாக்குறை மன நிலையில் பணத்துக்காகப் போராடுகையில் பணம் என்றும் பற்றாக்குறையாகவே இருக்கும்.
பணம் கொடுக்கும்போதும், வாங்கும்போதும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் இருங்கள். லக்ஷ்மி வரும் போது வரவேற்பது போல, போகும்போதும் வாழ்த்தி, நன்றி சொல்லி, மீண்டும் வர வேண்டும் என பிரார்த்தியுங்கள்.
பணம் தரும் பாடங்கள்
“எனக்குப் பணம் பெரிசில்லை...!” என்று பேசிவிட்டுப் பணம் இல்லை என்று புலம்பாதீர்கள். பணம் உங்கள் வாழ்க்கைத் தேவைகளை, லட்சியங்களை அடையவும் உதவுகிறது. அதை முறையாகப் பெறவும், சிறப்பாகச் சேமிக்கவும், முதலீடு செய்யவும், சரியான பொருளாதார முடிவுகள் எடுக்கவும் பணம் பற்றிய சுகாதாரமான எண்ணங்கள் வேண்டும்.
பணம் சேர வேண்டுமா? “ எனக்குத் தேவையான செல்வம் எனக்கு என்றும் கிடைக்கிறது!” என்று சொல்லி வாருங்கள். பணப்பெட்டி முதல் பர்ஸ் வரை சுத்தமாக வையுங்கள். கடன் வாங்குவதிலும் குறுக்கு வழியில் பணம் பண்ணுவதிலும் உங்கள் சிந்தனையைச் செலவிடாமல் உங்கள் திறமைகளைப் பற்றி அதிகம் சிந்தியுங்கள்.
பணம் சேர வேண்டுமா? “ எனக்குத் தேவையான செல்வம் எனக்கு என்றும் கிடைக்கிறது!” என்று சொல்லி வாருங்கள். பணப்பெட்டி முதல் பர்ஸ் வரை சுத்தமாக வையுங்கள். கடன் வாங்குவதிலும் குறுக்கு வழியில் பணம் பண்ணுவதிலும் உங்கள் சிந்தனையைச் செலவிடாமல் உங்கள் திறமைகளைப் பற்றி அதிகம் சிந்தியுங்கள்.
பணக்கஷ்டம் பற்றி அன்னியருடன் புலம்புவதை நிறுத்தி, அதன் பாடங்களை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள். பணத் தட்டுப்பாடு சில பாடங்களை உங்களுக்கு வழங்க முயல்கிறது. அந்த பாடங்களை நீங்கள் கற்கும் வரை அவை உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும்!

வேண்டாம் எதிர்பார்ப்புகளின் பாரம்!

நம் ஏமாற்றங்களுக்குக் காரணம் நம் எதிர்பார்ப்பு கள். நாம் எதிர்பார்ப்பது நிறைவேறாதபோது அந்த நிராசை உறவுச் சிக்கல்களாய், குடும்பப் பிரச்சினைகளாய், பின் மெல்ல மெல்ல நோய்களாய் மாறும்.
எதிர்பார்ப்புகள் வருவது இயற்கை. எந்த நிலையிலும் நமக்கு எதிர்பார்ப்புகள் உண்டு. நினைத்தது நடந்தால் சந்தோஷப்படும் நாம், பொய்த்தால் எதிராளியைக் குறை கூறுகிறோம்.
மோசமான உறவு
திருமணங்களில் என்ன முக்கியமான சிக்கல்? எதிர்பார்ப்புகளின் ஒவ்வாமை தான். என்னிடம் சிகிச்சைக்கு வரும் தம்பதியினரிடம் இதை அடிக்கடி சொல்வதுண்டு: மோசமான கணவன், மோசமான மனைவின்னு சொல்றதைவிட மோசமான உறவுனு சொல்றது தான் பல நேரத்துல பொருந்தும். தனித்தனியாகப் பார்த்தால் நல்ல மனிதர்களாக இருக்கிற இரண்டு பேர், திருமணம் எனும் பந்தத்தில் எதிர்பார்ப்புகளின் ஒவ்வாமையில் தோற்றுப் போகிறார்கள்.
இந்த எதிர்பார்ப்புகள் மாறக்கூடியவை. காலத்தால் அழியக்கூடியவை. அனுபவத் தால் சமரசம் செய்யக்கூடியவை என்பதை உணர்ந்து விட்டால் பல உறவுச் சிக்கல்கள் சீராகிவிடும். நம் எதிர்பார்ப்புகள் அம்மா, அப்பா, குடும்பம், சாதி, மதம், ஊர், சினிமா, அக்கம் பக்கத்து நண்பர்களால் வளர்க்கப்பட்டவை. அவை மட்டுமேதான் சரி என்பதைப் போலக் காலப்போக்கில் இறுகிப் போவதுதான் பிரச்சினையின் அடி நாதம். பற்றாக்குறைக்கு ஒப்பீடுகள் வேறு.
“என் அப்பா போல நீ இல்லை.”
“என் அம்மா போல நீ இல்லை.”
வளரும் பருவத்தில் பல பாலியல் குழப்பங்கள் வர இந்த எதிர்பார்ப்புகள்தான் காரணம். முன்னொரு காலத்தில் தகவல் பற்றாக்குறையால் அறியாமையில் குழப்பம் வந்தது. இன்று தகவல் யுகத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல்களில் எது சரி, எது சரியில்லை என்று தெரியாததால் வருகிறது குழப்பம். ஊடகத் தாக்கம் அதை உச்சத்துக்குக் கொண்டுசென்றுவிட்டது.
தன் மீது எதிர்பார்ப்பு
காதல், காமம், குடும்பம், வாழ்வு முறை எனப் பல விஷயங்களில் நிஜத்தோடு தொடர்பில்லாத எதிர்பார்ப்புகளால் பலர் தங்கள் வாழ்க்கையில் தவறான முடிவுக்கு வருகின்றனர்.
“ஒரு ஸ்மார்ட் ஃபோனும் பைக்கும் இல்லேன்னா அப்புறம் காலேஜ் ஸ்டூடண்டுங்கிறதுக்கு என்ன கெத்து?”
“எங்கப்பா வேண்டாம்னா மறு பேச்சு பேச மாட்டோம்; இன்னக்கி இருக்கிற பசங்க வார்த்தைக்கு வார்த்தை விவாதம் பண்றாங்க! வயசுக்குக் கொஞ்சம் கூட மதிப்பு கிடையாது!”
“ எவ்வளவு சம்பாதிச்சா என்னப்பா, பொம்பள வீட்டைக் கவனிக்காட்டி எப்படி?”
எதிர்பார்ப்புகள் பல சமயங்களில் வார்த்தைகளில் சொல்லாமல் செயலில் எதிர்பார்க்கப்படுவதும் உண்டு. “சொன்னாதான் தெரியுமா?” என்பார்கள்.
பிறர் மீது உள்ள எதிர்பார்ப்புகளை விடத் தன் மேலுள்ள எதிர்பார்ப்புகளின் கனம் எப்போதும் சற்று அதிகமாகத்தான் இருக்கும். தன்னை நொந்துகொள்ளும் தன்மையும், தன்னைக் குறைவாக மதிப்பிடுதலும் இதன் காரணமாகத்தான்.
பூஜ்ய எதிர்பார்ப்புகள்
உங்களுக்கு உங்கள் மகனுடன் பிரச்சினையா? உங்களுக்கான அஃபர்மேஷன் இதுதான்: “ நான் என் மகன் பற்றிய எல்லா எதிர்பார்ப்புகளையும் வெளியேற்றுகிறேன்.” (I release all my expectations about my son).
“எதிர்பார்ப்பே இல்லை என்றால் அவன் இஷ்டத்துக்குத் தறிகெட்டுப் போக மாட்டானா?” என்று நினைக்கிறீர்களா? இல்லை! நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை வெளியேற்றி னால், அவனை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்ப்பில்லாமல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் போது அவன் உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முயலுவான். உங்களுக்கும் அவன் எதிர்பார்ப்புகள் புரிய ஆரம்பிக்கும்.
உங்களின் எல்லாச் சிக்கலான உறவிலும் இதை முயற்சி செய்து பாருங்கள். “நான் ---------- பற்றிய எல்லா எதிர்பார்ப்புகளையும் வெளியேற்றுகிறேன்.” (I release all my expectations about -------------).
எதிர்பார்ப்புகளைப் பூஜ்ஜியத் துக்குக் கொண்டுவருதல் நலம். மனைவி காபியை ஸ்ட்ராங்காகத் தான் போட வேண்டும் என்று எதிர்பார்ப்பு உள்ளபோது என்ன செய்வோம்? ஸ்ட்ராங்காகக் காபி கிடைத்தால் பேசாமல் குடிப்போம். லைட்டாக வந்தால் குதறுவோம். எதிர்பார்ப்புகளை நீக்கிப் பாருங்கள். ஒவ்வொரு ஸ்ட்ராங்கான காபியையும் நன்றியோடு ருசித்துக் குடிப்பீர்கள். லைட்டான காபி வரும்போது அதை லைட்டாக எடுத்துக்கொள்வீர்கள்.
இயல்பாய் மலரட்டும்!
உங்கள் எதிர்பார்ப்புகள் குறையும்போது வாழ்க்கை கனமில்லாமல் அழகாக மாறும். எதிராளியின் எதிர்பார்ப்புகள் புரிய ஆரம்பிக்கும். அது புரிதலை எளிமைப்படுத்தும்.
யோசித்துப் பாருங்களேன். பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் மேல் பெற்றோர்களுக்கான எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் எதிர்பார்ப்புகள்தானே?
குறிக்கோள்கள் இருக்கலாம். கடமைகளைச் செய்யலாம். உங்கள் எண்ணத்தைச் சொல்லலாம். ஆனால், அவை தீவிரமான எதிர்பார்ப்புகளாக மாறி அவர்கள் கழுத்தை நெறிக்க வேண்டாம். இன்று மாணவர்கள் தோல்வியின்போது துவண்டுபோவதன் முக்கியமான காரணம் ஒன்றுதான். தங்களால் பெற்றோர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியவில்லையே என்பதுதான்.
என்ன படிக்கிறான் என்று பெற்றோருக்குத் தெரியாத பல கிராமத்துக் குழந்தைகள் இயல் பாக வளர்வதற்கும், எல்லாம் கொடுத்தும் சிறு தோல்வியில் நகரக் குழந்தைகள் நொறுங்கிப் போவதற்கும் காரணம் இந்த எதிர்பார்ப்புகள்தாம்!
“என் பிள்ளையை நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொள்கிறேன்” (I accept my child unconditionally) என்று சொல்லிக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைக்கான நேரமும் இடமும் கிடைக்கும். அவர்களுக்குச் சுதந்திரமாய்ச் சிந்தித்து வாழ்க்கையைக் கற்கும் வாய்ப்பு கிடைக்கும்
எதிர்பார்ப்புகளின் பாரம் இல்லாமல் அவர்களை இயல்பாய் மலர விடுங்கள்!

கடந்த காலத்தை வெளியேற்றுங்கள்!

வேண்டும் என்பதற்காகப் போராடுவதை விட, வேண்டாம் என்பதற்குத்தான் நாம் வாழ்வில் அதிகம் போராடு கிறோம். கடன் வேண்டாம், நோய் வேண்டாம், மனக்கஷ்டம் வேண்டாம், பிரச்சினை வேண்டாம்... இப்படி நிறைய ‘வேண்டாம்’கள் உண்டு. நமது அத்தனை சக்தியையும் திரட்டி எதை வேண்டாம் என்று எண்ணுகிறோமோ அதில் செலுத்துகிறோம். பிறகு சொல்வோம்: “எது வேணாம்னு நினைச்சோமோ அது அப்படியே நடந்தது!” வேண்டாம் என்று நினைப்பதையும் நம் மனதின் சக்தி கவர்ந்து இழுத்து வரும்!
வேண்டாத வெளிநாடு
என் உறவினர் ஒருவர் தன் ஒரே பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் போது ஒரே நிபந்தனை தான் வைத்தார்: “பையன் வெளிநாடு போகக் கூடாது. உள்ளூரிலேயே வேலை இருக்கணும்.” காரணம், கடைசிக் காலத்தில் தன் பெண் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம். நல்ல பணக்காரரான அவர் அமெரிக்க மாப்பிளைகள் பலரை நிராகரித்தார். கடைசியில் ஒரு உள்ளூர் பையனாகப் பார்த்து மணம் முடித்தார்.
சில ஆண்டுகளிலேயே எதேச்சையாக ஒரு பெரிய வேலை அமெரிக்காவில் கிடைக்க, அவரது மாப்பிள்ளை மனைவியுடன் பிடிவாதமாய் அமெரிக்கா போய்விட்டார். 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திரும்பவில்லை. “எது நடக்கக் கூடாதுன்னு காலம் பூரா பிரார்த்தனை பண்ணினேனோ அதையே இறைவன் எனக்கு கொடுத்துட்டான்!” என்பார் விரக்தியாக.
அருகிலேயே மகள் இருக்க வேண்டும் என நினைத்து வேண்டியிருந்தால் பலித்திருக்கும். ஆனால், மகள் அமெரிக்கா போகக் கூடாது என்றே அவர் வேண்டியுள்ளார். அவரின் உள்மனப் பிரார்த்தனையில் அமெரிக்கா மட்டும்தான் வலிமையாக இருந்திருக்கிறது.
நேற்றைய சங்கிலி
கடவுள் என்பது உள் மனம்தான். பிரார்த்தனை என்பது உங்கள் எண்ணங்கள் தான். நம்பிக்கை எப்போதும் நேர்மறை சக்தி. நம்பிக்கையுடன் ஒன்றைச் செய்தால் அது பலிக்கிறது. காரணம், நம்பிக்கை எண்ணங்களும் ஊக்க உணர்வுகளும் அதற்கான மனிதர்களையும் நிகழ்வுகளையும் அழைத்து வரும்.
அதனால் கடன் வேண்டாம் என்று எண்ணுவதைவிட செல்வம் வருகிறது என்று நம்புவது முக்கியம். நோய் வேண்டாம் என்று எண்ணுவதைவிட ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது முக்கியம். சண்டை வேண்டாம் என்று எண்ணுவதை விட சமரசம் ஏற்படுகிறது என்று நம்புவது முக்கியம்.
“கடங்காரன் நாளை அஞ்சு லட்சம் கேட்டு கழுத்தை நெறிப்பான். எப்படி செல்வம் வரும் என நம்புவது?” என்று கேட்கலாம். “எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை. எப்படி ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது?” என்பதும் நியாயமான கேள்வி. “என்ன பேசினாலும் சண்டையில்தான் முடிகிறது. எப்படி சமரசம் ஏற்படுகிறது என்று நம்புவது?” வாஸ்தவம்தான். எல்லாமே சரியான கேள்விகள்தான்
உங்கள் நேற்றைய எதிர்மறை சக்தியின் விளைவு இன்றைய நிலை. அதைச் சான்றாக வைத்து இன்று நேர்மறையாக யோசிக்க மறுத்தால் இந்தச் சங்கிலி தொடரும். எனவே, தர்க்க சிந்தனையில் மாட்டிக் கொள்ளாமல் நம்பிக்கையோடு நல்லதை நினையுங்கள்.
பட்டியலிடுங்கள்
அம்பேத்கர், பாரதியார், மார்க்ஸ் என யாருடைய செயல்பாட்டை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். தன்னைச் சுற்றி நடக்கும் நிதர்சனங்களில் நீர்த்துவிடாமல் அதற்கு மாற்றான செயல்பாடுகளில் நம்பிக்கையோடு செயல்பட்டதால்தான் அவர்கள் சரித்திர நாயகர்கள் ஆனார்கள்.
நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விட நீங்கள் வலிமையானவர் என்று நம்புகிறீர்களா? அப்படி என்றால் நம்பிக்கையோடு எதிர்வினையைத் துவங்குங்கள்.
எங்கிருந்து துவங்கலாம்? இப்படி ஆரம்பிக்கலாம்... உங்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதற்கு நீங்களும் ஒரு முக்கியமான காரணம் அல்லவா? உங்கள் எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள் என உங்களால் நிகழ்ந்தவை என்னென்ன என்று யோசித்துப் பட்டியலிடுங்கள்.
ரிலீஸ் செய்யுங்கள்
குற்ற உணர்ச்சியில்லாமல், அவற்றுக்காக வருந்தாமல் அவற்றை வெளியேற்றுங்கள். “இந்த கடனுக்குக் காரணமான என் அனைத்து எண்ணங்களையும் உணர்வு களையும் நான் முழுமையாக வெளியேற்றுகிறேன்!”
இதைத் தொடர்ந்து ஜபிக்கும்போது, எழுதும்போது உங்கள் எண்ணம்-செயல்-பிரச்சினை என்ற முறையில் நீங்கள் வடித்துள்ள வடிவம் உடையத் தொடங்கும். இதற்கு “Release technique” என்று பெயர்.
“இந்த வலிக்குக் காரணமான என் அனைத்து எண்ணங்களையும் உணர்வு களையும் நான் முழுமையாக வெளியேற்றுகிறேன்!”
‘வேண்டாம்’ என்று நினைக்கிற விஷயங்கள் அனைத்துக்கும் இந்த ரிலீஸ் டெக்னிக்குடன் கூடிய அஃபர்மேஷனைப் பயன்படுத்தலாம்.
இதில் முக்கியமான விஷயம்: நடந்ததற்கு வருத்தம் அல்லது குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை. அது நடந்தபோது உங்களுக்குத் தெரிந்ததை, உங்களுக்கு முடிந்ததைச் செய்தீர்கள். இன்று இந்தப் புதிய கற்றல் மூலம் புதிய எண்ணத்தோடு புதிய செயல் புரிய நினைக்கிறீர்கள். அவ்வளவு தான்.
நாமே மாற்றலாம்
எண்ணம் மாறக்கூடியது என்றால் செயலும் மாறக்கூடியது. நம் விதியும் மாறக்கூடியது. விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வது இதைத்தான்.
நீங்கள் உருவாக்கிய நோயையும், நீங்கள் உருவாக்கிய உறவுப் பிரச்சினையையும், நீங்கள் உருவாக்கிய நிதிப் பிரச்சினையையும், நீங்கள் உருவாக்கிய மனக் கஷ்டங்களையும் நீங்களே சரி செய்துகொள்ளலாம் என்பதை விட வேறு நல்ல செய்தி இருக்கிறதா?

சந்தோஷப்படு! சந்தோஷப்படுத்துவாய்!

நம் எண்ணம்தான் பேச்சைத் தீர்மானிக்கிறது. பேச்சும் செயலும்தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. இது உலகம் ஒப்புக்கொள்ளும் உண்மை.
வாழ்க்கையை மாற்றுவதற்கு பேச்சும் செயலும் மாற வேண்டும் என்றால் முதலில் எண்ணம் மாற வேண்டும். எப்படி மாற்றுவது என்று சொல்லித்தருவதுதான் அஃபர்மேஷன் முறை.
தமிழர்கள் மத்தியில் லூயிஸ் ஹேயையும் அஃபர்மேஷனையும் கொண்டுசேர்த்த திருப்தி, வந்து குவிந்த மின்னஞ்சல்களைக் கண்டதும் ஏற்பட்டது. தீராத வலி, பிடிவாதம் பிடிக்கும் மகன், மண முறிவு, கடன் தொல்லை, ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி, வேலை உயர்வு என எல்லாப் பிரச்சினைகளுக்கும் அஃபர்மேஷன் கேட்டு எழுதியிருந்தனர்.
நம் மனசு மாறினால் எல்லாம் மாறும் என்று நம்புகிறவர்கள் இத்தனை பேரா?
என்ன எழுத வேண்டும்? எத்தனை முறை எழுத வேண்டும்? மற்றவர்களுக்காக நான் எழுத முடியுமா? எல்லாருக்கும் வேலை செய்யுமா? இதனுடன் மற்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாமா? எல்லா விஷயங்களுக்கும் இது உதவுமா? குடும்பத்தில் அனைவரும் எழுத முடியுமா? எந்தப் பிரச்சினைக்கு என்ன எழுத வேண்டும் என்று எப்படிக் கற்றுக்கொள்வது? என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மன நிலைகள்
அஃபர்மேஷன் என்பது நேர்மறை வாக்கியம். உங்களுக்குள் நீங்கள் பேசிக்கொள்ளும் உரையாடல் இது. ஆழ்மனதில் தர்க்கச் சிக்கல்கள் இல்லாமல் ஒரு தியானம் போலத் தொடர்ந்து ஒரு நேர்மறை எண்ணம் ஓதப்பட அது வலுப்பெறுகிறது. இது நாள் வரை பீடித்திருந்த எதிர்மறை எண்ணத்தின் தாக்கத்தைத் தகர்க்கிறது. வேரூன்றியிருக்கும் எதிர்மறை எண்ணத்தைப் பலவீனப்படுத்துகிறது. இவை அனைத்தும் சூட்சுமமாக அளவிட முடியாத வடிவில் நிகழ்கின்றன. அதனால்தான் இறுதியில் ஏற்படும் மாற்றம் மாயாஜாலம் போலத் தெரிகிறது!
இது தியானம், ஜபம், ஆழ்நிலை மனோவசியம் போலத்தான்! ருத்திராட்ச மாலை உருட்டும்போதும்,  ராம ஜெயம் எழுதும்போதும், கூட்டுப் பிரார்த்தனை செய்யும்போதும், மவுன விரதம், உண்ணா விரதம் இருக்கும்போதும், மனம் உருகிப் பிரார்த்திக்கும்போதும், தன்னிலை மறந்து இசையில், நடனத்தில், பக்தியில் கரையும் போதும், தன்னலம் கருதாச் சேவையில் உள்ள போதும் ஏற்படும் மனநிலைகள் அஃபர்மேஷன் எழுதும் போதும் ஏற்படும் மன நிலைக்கு ஒப்பானவை!
சுய அன்பு
லூயிஸ் ஹே போன்றவர்கள் எந்தப் பிரச்சினைக்கு, எந்த நோய்க்கு எதெல்லாம் ஆதாரச் சிந்தனைகள் என்பதை ஆராய்ந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அஃபர்மேஷன்கள் அமைத்தார்கள். மொழி பேதமில்லாமல் இவை வேலை செய்தன. தவிர, இந்த வழிமுறையைப் பல பெயர்களில் பல யுத்திகளாகப் பிரபலப்படுத்தினார்கள் பலர். கவர்ச்சி விதி, மனக்காட்சி அமைத்தல், ஆழ் நிலை ஆலோசனை என்று பல பெயர்களில் பயன்படுத்தப்படுவது அஃபர்மேஷன் முறை தான்.
உங்கள் எண்ண ஓட்டத்தை அறிந்து, உறைந்து கிடக்கும் எதிர்மறை எண்ணங்களைக் கண்டுபிடித்து அதற்கேற்ப நேர்மறை வாக்கியங்கள் அமைத்துக் கொடுப்பது அவசியம். மாற்றுக் கரத்தால் எழுதும்போது அதுவும் ஒரு தியான அனுபவமாகிறது. தவிர, உங்களை உள்நோக்கிப் பார்க்க வைக்கிறது. இப்படித்தான் வேலை செய்கிறது அஃபர்மேஷன்.
எல்லோருக்கும் பயன்படும் வாக்கியம் ஒன்றைக் கொடுங்கள் என்று என்னைக் கேட்டால் நான் பரிந்துரைப்பது இதைத்தான்:
“நான் என் மீது அன்பு செலுத்தி என்னை ஏற்றுக்கொள்கிறேன்!” (I love and accept myself ). என் பயிலரங்குகளில் இதை basic affirmation என்று குறிப்பிடக் காரணம் இது எல்லோருக்கும் தேவை. நீங்கள் முதன்முதலில் ஒரு அஃபர்மேஷன் எழுத வேண்டும் என்றால் இதிலிருந்து ஆரம்பியுங்கள்.
தன்னிறைவு, தன்னம்பிக்கை, உறவுகள் சீராகுதல், தலைவலியிலிருந்து நிவாரணம் எனப் பல நன்மைகள் அளிக்க வல்லது இது.
அன்பும் ஏற்றுக்கொள்ளுதலும்
நாம் நம் மீதும் பிறர் மீதும் செலுத்தும் வன்முறைக்கு ஆதாரமான காரணம் அன்பு பற்றாக்குறைதான். பிறரைக் குற்றம் சொல்வோர் முதலில் தங்களையே கடிந்துகொள்கின்றனர். குறைபட்ட சுய மதிப்பு உள்ளவர்கள்தான் பிறரின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவந்தனர். உள்ளே அவமானப்படும்போது பிறரை அவமானப்படுத்துவார்கள்.
பிறரை சந்தோஷமாக வைத்திருக்கத் தெரியாதவர் தன்னை முதலில் சந்தோஷமாக வைத்திருக்கத் தெரிந்திருக்க மாட்டார். பிறரின் தன்னம்பிக்கையை நசுக்குபவர்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகத் தான் இருப்பர். ஆதலால், இந்த வாக்கியம் உங்களை நீங்கள் பரிவுடன் அன்புடன் நடத்த வழி செய்யும்.
ஏற்றுக்கொள்ளுதல்தான் உறவுகளின் சாரம். சொல்லப்போனால் வாழ்க்கையின் சாரம். நம் எதிர்பார்ப்புகளும் நிதர்சனங்களும் வேறுபடும்போதுதான் மனம் ஏமாற்றம் அடைகிறது. பின் எதிர்மறையான எல்லாக் குப்பைகளையும் உள்ளே கொட்ட ஆரம்பிக்கிறது. தன்னைச் சார்ந்த மனிதர்களையும் சூழலையும்கூடச் சீர் கெட வைக்கிறது. தன்னை விரும்பி ஏற்றுக்கொள்ளும் மனிதர் அடுத்த கட்ட உள்மனப் பரிமாணத்துக்குத் தயாராகிறார்.
அன்பும் ஏற்றுக்கொள்ளுதலும் கொண்ட வாழ்க்கையில் தோல்வியில்லை. ஏமாற்றமில்லை. இதைத் தர்க்கரீதியாகப் பேசிப் புரிய வைப்பதை விட இந்த ஆழ் நிலை சுய வாக்கியங்கள் அமைதியாக இந்த அற்புதத்தை நிகழ்த்துகின்றன.
90 சதவீதப் பிரச்சினைகள் நாமே ஏற்படுத்திக்கொண்டவை. வெளிக் காரணங்களால் ஏற்பட்ட மிச்சம் 10 சதவீதப் பிரச்சினைகளிலும் நம் முடிவுகள் சார்ந்துதான் அமைதியும் வெற்றியும் கிடைக்கின்றன.
குரங்கின் பிடி
ஆப்பிரிக்காவில் குரங்குகளைப் பிடிக்க ஒரு வழிமுறையைக் கையாளுவார்கள். அகன்ற அடித்தளமும் குறுகிய திறப்பும் கொண்ட கண்ணாடிக் குடுவையில் பாதிக்கு மேல் வேர்க்கடலையைக் கொட்டி வைப்பார்களாம். கடலை தின்னும் ஆசையில் கையை உள்ளே குறுக்கிவிட்டுக் கடலையை அள்ளியவுடன் முஷ்டி பெருத்துக் கையை வெளியே எடுக்க முடியாமல் போகும்.
கையில் உள்ள கடலையைக் கொட்டி விட்டால் கையை எடுத்துவிடலாம். ஆனால் கடலை ஆசை தடுக்கும். கடலையோடு எவ்வளவு முயன்றாலும் வலிதான் மிஞ்சும். கடலையும் கிடைக்காது. கையும் வெளியே வராது. இப்படிச் சிக்கித் தவிக்கையில் வேட்டைக்காரர்கள் வந்து குரங்குகளைப் பிடித்துச் செல்வார்களாம்!
நம் வாழ்க்கையிலும் இப்படிக் கையை வைத்துவிட்டு, எடுக்க மனம் இல்லாமல் வலியோடும் நிராசையோடும் எத்தனை போராட்டங்களை இறுதி வரை நடத்துகிறோம்?

நம்பிக்கை பலிக்கும்

நம் வாழ்வில் அ ஃபர்மேஷன் வாக்கியங்களின் மூலம் வியக்கத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்த முடியும். கிட்டத்தட்ட மாயாஜாலம் என்று சொல்லுமளவுக்கு அந்த மாற்றங்கள் இருக்கவும்கூடும். அதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
உடல் நலமும் தொழில் நலமும்
ஓசூரில் ஒரு பெரிய தொழிற்சாலையில் நிர்வாகத்துக்கும் தொழிலாளிகளுக்கும் இணக்கமில்லாத சூழலில் ஒரு பயிற்சி வகுப்பு நடத்த வேண்டியிருந்தது. தொழிற்சங்கத்துக்கு இந்த வகுப்பில் நம்பிக்கையில்லை. இந்த வகுப்பை எப்படிக்கொண்டுபோவது என்று மனிதவளத் துறைக்கும் புரியவில்லை.
நிர்வாகத்தினரிடம் “முதல் வகுப்பில் சங்க நிர்வாகிகள் மட்டும் உட்காரட்டும். நிர்வாகத்தைச் சேர்ந்த யாரும் இரண்டு நாட்களுக்கு வர வேண்டாம். இந்தப் பயிற்சி பயன் தரும் என்று சங்கத்தினர் சொன்னால் மற்றவர்களுக்குத் தொடரலாம்” என்று நான் சொன்னேன். எனது யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு பள்ளிக்கூடத்தில் இந்தப் பயிற்சி வகுப்பைத் தொடங்கினேன்.
வந்திருந்தவர்களின் உடல் நலப் பாதிப்புகளுக்கான அஃபர்மேஷன் வாக்கியங்களைத் தமிழில் முதல் முறையாகக் கொடுத்தேன். எப்படிச் செயல்படுகிறது என்று அறிவியல்பூர்வமாக விளக்கி அவர்களின் தொழிலகத்தின் உறவுச் சிக்கல் வரை இதில் தீர்க்க முடியும் என்று புரிய வைத்தேன். சங்கம் பரிந்துரைத்ததால் எல்லாத் தொழிலாளிகளும் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டார்கள்.
மாதக் கணக்கில் இழுபறியாக இருந்த சிக்கல் தீர்ந்தது. அந்தத் தொழிலாளர் குடியிருப்பில் அஃபர்மேஷன் அவ்வளவு பிரபலமானது. இந்த அனுபவத்துக்குப் பிறகுதான் தேவைப்படும் எல்லா இடங்களிலும் இந்த முறையை முழுவதுமாகப் பயன்படுத்த ஆரம்பித்தேன்!
கடிகளும் எண்ணங்களும்
ஒரு வகுப்பில் இருந்தவருக்குப் பூச்சிக்கடியால் கைகளில் தடிப்பு தடிப்பாக வீக்கம் இருந்தது. “நீங்கள்தான் எல்லாவற்றையும் நாம் கவர்கிறோம் என்று சொல்வீர்களே? இப்போது அஃபர்மேஷன் முறையில் இவரைச் சரிப்படுத்துங்கள்” என்று சவால் விடுவதுபோல, அவருக்குப் பக்கத்தில் இருப்பவர் கேட்டார்.
விஷக்கடிகள் பற்றியும் அவற்றைக் கவரும் உள்மனச் சிந்தனைகளையும் உணர்வுகளையும் பற்றி நான் அதிகம் அறிந்திராத காலகட்டம் அது. எனினும் இந்த அணுகுமுறையின் அடிப்படை அம்சங்களில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது.
“எனக்கு ஏன் என்று தெரியவில்லை. ஆனால், நீங்கள் அனைவரும் சென்ற பாதையில் இவர் ஒருத்தருக்கு மட்டும் இது ஏற்பட்டுள்ளது என்றால் நிச்சயம் இவர் இதைக் கவர்ந்துள்ளார். இது எதனால் என்று தெரியாவிட்டாலும் ஒரு பொதுப்படையான வாக்கியம் மூலம் இதைச் சரிசெய்ய முயலலாம்!” என்றேன். “பூச்சிக்கடிக்குக் காரணமான என் எண்ணங்களையும் உணர்வுகளையும் நான் முற்றிலுமாக வெளியேற்றுகிறேன்!” என்று ஒரு பக்கம் முழுதும் எழுதச் சொன்னேன்.
முழு நம்பிக்கையுடன் மனப்பூர்வமாக இதை எழுதினால் அதற்கான பலன்களை அடையலாம் என்பதுதானே அஃபர்மேஷன் வாக்கியங்களின் வலிமை?
எழுதியவரின் கைகளில் இருந்த தடிப்புகள் மெல்ல நீங்கின. அவருக்கும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை.
“பாம்பு கடிச்சா இது போல எழுதினா சரியாகுமா?” என்று குறும்பாகக் கேட்டார் அதே நண்பர்.
“நான் பயன்படுத்தவில்லை. ஆனால், கடிபட்டவருக்கு பாடம் போட்டு மந்திரம் சொல்லி விஷம் இறக்கும் ஆட்கள் இன்றும் கிராமங்களில் உள்ளனர். அவர்களின் வழிமுறைகளும் உடலைத் தாண்டிய மருத்துவம்தானே?” என்றேன் நான்.
நான் சொல்ல வருவது மந்திர சக்தி பற்றி அல்ல. ஆழ்ந்த நம்பிக்கையுடன் அஃபர்மேஷன் வாக்கியங்களைச் சொல்லும்போது அங்கே நம் மனமே சிகிச்சைக்கான வேலைகளைச் செய்கிறது. மனதின் அளப்பரிய ஆற்றல்களில் ஒன்று அது. அதை வெளிக்கொணர உதவுவதே அஃபர்மேஷன் வாக்கியங்களின் வேலை.
ஆழ்மனத் தியானம், அஃபர்மேஷன் முறைகள், ஹிப்னாஸிஸ் போன்றவை அலோபதிக்கு எதிரானவை அல்ல. எனக்குத் தெரிந்து சில அலோபதி மருத்துவர்கள் இத்தகைய மாற்று சிகிச்சைகளைச் சிபாரிசு செய்வது உண்டு. உடலை மட்டும் குணப்படுத்த முயலாமல் மொத்த உயிரையும் குணப்படுத்த நினைப்பவை இந்த வழிமுறைகள்.
ஒரு தவறான எண்ணம்கூட அதன் பாதிப்பை உடலில் காட்டிவிடும். எது விதை என்று தெரியாமல் மரமாகி வளர்ந்து நிற்கும்போதுதான் அதைக் கட்டுப்படுத்த நினைக்கிறோம். இதனால் தான் இத்தனை நோய்கள், இத்தனை பிரச்சினைகள், இத்தனை சேதங்கள்!
நேர்மறை மனம்
ஒவ்வொரு வலியும் நமது தவறான சிந்தனை ஒன்றை நமக்குக் காட்டிக் கொடுக்கிறது. வலி ஞானத்துக்கு வழி செய்கிறது.
ஒவ்வொரு உடல் உபாதையையும் உள் நோக்கிப் புரிந்துகொண்டு அதன் விதையான சிந்தனையை எதிர்கொண்டால் தான் முழுமையாக அதிலிருந்து விடுபட முடியும். அதனால்தான் இன்று யோகாவையும் ஹிப்னாஸிஸ் போன்ற வழிமுறைகளையும் மெல்ல மெல்ல அனுசரணையாக அலோபதி மருத்துவமும் பார்க்க ஆரம்பித்துள்ளது.
அஃபர்மேஷன் முறை எந்த முறைக்கும் எதிரானது அல்ல. உங்கள் மனதை நேர்மறையாகத் திருப்பும் முயற்சி. அவ்வளவுதான்.
விடை உங்களுக்குள்ளே
பல நோய்களுக்கான காரணம் மனதில்தான் உள்ளது. மனதின் கோளாறு உடல் கோளாறாக வெளிப்பட முடியும்.
தீராத மூல நோயால் அறுவைச் சிகிச்சைவரை சென்ற பெண்மணி தன் நோயின் உளவியல் காரணம் புரிந்து அஃபர்மேஷன் முறையில் பயிற்சி எடுத்தபோது மருத்துவர்கள் வியக்கும் வண்ணம் பூரணமான சுகம் பெற்றார்.
மூட்டு வலியை இனி ஒன்றும் செய்ய முடியாது என்று ஒரு தலைமைச் செயல் அதிகாரி நினைத்தார். தன் பெற்றோர்களுக்கும் தனக்குமான உறவு முறைதான் அந்த வலிக்கான காரணம் என்று தெரிந்துகொண்டார். அதன் பிறகு அஃப்ர்மேஷன் மூலம் மீண்டும் ஓட முடியும் அளவுக்கு குணமானார்.
அளவில்லாத கடன் சுமையில் இருந்தவர் ஒரு வருடத்தில் தன் நிதிநிலையைச் சீர் செய்தார். தன் எண்ணங்களால்தான் அத்தனை நஷ்டமும் என்று புரிந்ததும், அவர் அஃபர்மேஷன் எழுத ஆரம்பித்தார். எழுதும்போதே நிலைமை சரியாவதை உணர்ந்தார்.
விவாகரத்து வரை சென்ற தம்பதியினர் தங்கள் நிலைக்குக் காரணம் பொதுவான ஒரு எண்ணம்தான் எனப் புரிந்துகொண்டு அதை அஃப்ர்மேஷனில் மாற்றி ஒன்று சேர்ந்தனர்.
நிறைய நிஜ நிகழ்வுகள் ஆழ் மன அற்புதச் சக்தியை நமக்கு உணர்த்துகின்றன. உங்கள் பிரச்சினைக்கான விடை உங்கள் பிரச்சினைகளுக்குள்ளேதான் ஒளிந்துள்ளது. வெளியே இல்லை. அதை வெளிக்கொண்டுவந்து அதன் திசையை மாற்றும் அற்புத வழிமுறை தான் அஃபர்மேஷன் முறை.
நம்பினார் கெடுவதில்லை என்பது சத்திய வாக்கு. அந்த நம்பிக்கை ஆண்டவன் மீது இருந்தாலும் சரி. அல்லது அந்த ஆண்டவனே உங்களுக்குள்தான் என்று நினைத்து உங்களையே நம்பினாலும் சரி. நம்பிக்கை பலிக்கும்!

எல்லாம் நன்மைக்கே!

என் வாழ்வில் அஃபர்மேஷன் முறை முதன் முறையில் பெரிதாக உதவியதே ஒரு சுவாரசியமான கதை. பத்து வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது அது.
புதிதாகக் கட்டிக்கொண்டிருந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒன்றை பதிவு செய்தேன். தங்கியிருந்த வாடகை வீட்டில் சொல்லி விட்டு புதுமனைப் புகுவிழாவுக்கு பத்திரிகை அடித்தபோதுதான் எனக்கு அந்தச் செய்தி தெரிந்தது.
நான் முன்பணம் கொடுத்திருந்த குடியிருப்புக்கு இன்னும் அரசு ஒப்புதல் வாங்கப்படவில்லை என்று. ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தாயிற்று. நான் தங்கியிருக்கும் வீட்டுக்கும் வேறு ஆளிடம் முன்பணம் வாங்கிவிட்டார் வீட்டு உரிமையாளர்.
யானை வாய் கரும்பு
அதனால், எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நான் சொன்னதை என் அப்பா ஒப்புக்கொள்ளவில்லை. “முன்பணத்தைத் திருப்பிக் கேள், பதிவு செய்ததை ரத்துசெய், வேறு வீடு பார்!” என்றார். நான் தங்கியிருந்த வாடகை வீட்டின் சொந்தக்காரரோ கறாரானவர். இது தவிர, புதுமனைப் புகுவிழாவுக்கு ஊருக்கே தகவல் சொல்லிவிட்டேன். இன்னும் 3 வாரங்கள்தான் இருந்தன.
என் நண்பன் வேறு பயமுறுத்தினான். “ரியல் எஸ்டேட் பிஸினஸ்ல எல்லாம் பணம் கொடுத்தா யானை வாயில போன கரும்பு தான். எல்லா வேலையையும் விட்டுட்டு தினம் அந்தக் கட்டுமான நிறுவனத்துக்குப் போய் கண்டிப்புடன் பேசு. அலைஞ்சாத்தான் ஏதாவது தேறும்!” என்பான்.
மீண்ட கரும்பு
திக்குத் தெரியாமல் நின்றபோது எனக்கு ரெய்கி, மலர் மருத்துவம், அஃபர்மெஷன் எல்லாம் கற்றுத்தந்த ஆசிரியர் பாலகுமாரிடம் சென்றேன். “பயம் வேண்டாம். நம்பிக்கையோடு இதைச் சொல். போதும்” என்று ஒரு அஃபர்மேஷன் தந்தார்.
அதைச் சொல்லியபடி வண்டி ஓட்டிக்கொண்டு வந்தேன். நேராக வீட்டுக்காரரிடம் சென்று என் நிலையைச் சொன்னேன். அவரோ “ அந்த ஃப்ளாட் வேண்டாம். ரிஸ்க். பரவாயில்லை, நம் வீட்டிலேயே இருங்கள், அடுத்த வீடு கிடைத்து செட்டில் ஆகும் வரை!” என்றார். பாதி வெற்றி கிடைத்தது.
அடுத்த நாள் அந்தப் பெரிய கட்டுமானக் கம்பனியின் முதலாளியைப் பார்த்தேன். எனக்கு வீடு வேண்டாம் என்று கடிதம் கொடுத்தேன். முதலில் நெருக்கடியாகப் பேச ஆரம்பித்தவர், பின்னர் “10 ஆயிரம் ரூபாய் பிடித்தம் போக மிச்சப் பணம் உங்கள் ஃப்ளாட்டை அடுத்த ஆள் வாங்கும்போது தருகிறேன்” என்றார். நானும் அதோடு விட்டு விட்டு மற்ற வீடுகளைப் பார்த்தேன். அவர் சொன்ன தொகை காசோலையாக வீட்டுக்கு வந்திருந்தது. நம்ப முடியவில்லை. ஆனந்தத்தில் ஸ்தம்பித்துப்போனோம்.
மாறு!  மாறும்!
கதை இன்னும் முடியவில்லை. அடுத்த வாரமே நண்பரைப் பார்க்கப் போகும்போது வழி மாறி நந்தனத்தில் சுற்றியபோது முடிந்த நிலையில் ஒரே ஒரு ஃப்ளாட் நல்ல விலைக்குத் தயாராக இருந்ததைப் பார்த்தேன். குறைந்த விலையில் நல்ல சூழலில் இருந்தது. உடனே முடித்து விட்டோம். சொன்ன நாளில் புதுமனை புகுந்தோம். அனைத்தும் சுபமாக முடிந்தன.
எனக்கு அவர் சொன்ன அஃபர்மேஷன் இது தான். I trust the process of life. (நான் வாழ்க்கையின் வழிமுறையை நம்புகிறேன்!)
என் சந்தேகமும் பயமும் பதற்றமும் என்னை விட்டு விலகின. என் நம்பிக்கையும் அமைதியும் எதிராளிகளைப் பாதித்திருக்கின்றன. வீட்டுக்காரர் சிரமம் பார்க்காமல் உதவினார். அதே போல, கட்டுமான நிறுவன உரிமையாளரும் என் நியாயத்தையும் நம்பிக்கையையும் உணர்ந்து, அவர் சொன்ன தொகையை (நான் பலமுறை பேசவேண்டிய அவசியம் இல்லாமல்) காசோலையை வீட்டுக்கே அனுப்பி வைத்தார்.
எல்லாம் நன்மைக்கே என்ற அடிப்படையிலான என் ஆழ்மன மாறுதல்கள், என் உடல் நிலை, மன நிலை, என் பேச்சு, என் முடிவு எடுக்கும் திறன், எதிராளியைக் கையாளும் திறன், நெருக்கடியைக் கையாளும்போது விலகாத அமைதி என்று சகலத்தையும் எனக்குள் மாற்றியிருந்தன. அதன் சிறு வெளிப்பாடுகள் தான் புற உலகின் மாற்றங்கள்.
இது நடந்தபோது பலர் பலவிதமாக இந்த நிகழ்வைப் புரிந்துகொண்டார்கள். நான் புரிந்துகொண்டது ஒன்றே ஒன்றைத்தான். நாம் மாறினால் நம்மைச் சுற்றியுள்ள சூழல் மாறும்!
சங்கிலிப் பின்னல்
பிறகு, ஒவ்வொரு உடல் வலிக்கும் வாழ்வின் சிக்கல்களுக்கும் இந்த நேர்மறை வாக்கியங்களின் வழிமுறைகளைப் பின்பற்றி பல வெற்றிகள் கண்டிருக்கிறேன். என்னை விடப் பிறருக்கு அதிகமாக வெற்றிகள் கொடுப்பது என்னை மிகவும் யோசிக்கவும் வைத்தது. இந்த வழிமுறை எந்த மனதுக்கு எப்படி வேலை செய்கிறது என்றெல்லாம் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வைத்தது.
மொத்தத்தில் சிந்தனை- உணர்வு- உடல் நிலை- செயல்- விளைவுகள் எனும் சங்கிலி எவ்வளவு பலமாகப் பின்னப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.
அற்புதங்கள் என்பது என்ன? நம்ப முடியாதவை நடக்கும்போது அவற்றை அற்புதங்கள் என்று கூறுகிறோம். அப்படிப் பார்த்தால் “முடியாது” என்று இருந்த நிலை உங்களாலேயே நம்ப முடியாத தருணத்தில் “முடியும்” என்று மாறினால்? அது தான் அற்புதம்!
ஆன்மிகமும் அறிவியலும்
உங்கள் தர்க்க அறிவை விட மிகவும் சக்தி வாய்ந்த உள்ளுணர்வு சக்தி ஆழ்மனதுக்கு இந்தச் சிந்தனைகளைக் கொண்டு செல்கிறது. அதன் தாக்கம் உங்களுக்குள்ளும் வெளியிலும் மெல்லப் பரவும்.
இது அறிவியலா அல்லது ஆன்மிகமா என்று சிலர் கேட்பர். நான் கூறுகின்ற விஷயங்களில் அடிப்பகுதி ஆன்மிகம். மேல் பகுதி அறிவியல்.
மருத்துவத்துக்கும் ஆன்மிகத்துக்கும் இடையில் உளவியல் துறை பயணிப்பதால் இரு பக்கத் தாக்கங்களும் என்றும் அதற்கு உண்டு!
உங்கள் மனதைக் கூர்ந்து நோக்குங்கள். அதன் செயல்பாடுகள்தான் உங்கள் வாழ்க்கையில் சகலத்தையும் தீர்மானிப்பவை!

மன அடிமையை வேலை வாங்குங்கள்

எதிர்மறை எண்ணங்கள் நோய்களையும் பிரச்சினைகளையும் உண்டாக்குவது உண்மை என்றால் நேர்மறை எண்ணங்கள் அதைச் சரி செய்யும் சக்தி கொண்டவை.
 
பலர் என்னிடம் “நான் பணக்காரன் ஆவேன். நான் பெரிய ஆள் ஆவேன்” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன், ஒரு பயனும் இல்லை” என்பார்கள். நேர்மறை எண்ணங்களுக்கான பயிற்சியிலும் பலருக்கு வெற்றி கிடைக்காததன் காரணத்தையும் பிறகுதான் நான் தெரிந்துகொண்டேன்.
 
மூன்று விதிகள்
 
அஃபர்மேஷன் என்பதை நேர்மறை சுய வாக்கியங்கள் எனலாம். அவற்றை அமைக்க மூன்று அடிப்படையான விதிகள் உள்ளன:
 
1.“நான்” அல்லது “என்” என்று தன்னிலை அவசியம் இருக்க வேண்டும்.
 
2. நேர்மறை வினைச்சொல் ஒன்றோ அதற்கு மேலோ இருக்க வேண்டும். “ஏற்றுக்கொண்டு”, “உறுதிகொண்டு” என்பதைப் போல.
 
3. முக்கியமான விதி: நிகழ்காலத்தில் அமைய வேண்டும். “இருக்கிறேன்”, “செய்கிறேன்”, “ஆகிறேன்” என்று முடிய வேண்டும்.
 
சரி, உங்கள் வாழ்க்கையின் முதல் அஃபர்மேஷனை எழுதுங்கள். வலது கைக்காரர்கள் என்றால் இடது கையாலும், இடது கைக்காரர்கள் என்றால் வலது கையாலும் எழுதுங்கள். உங்கள் ஆழ்மனப் பதிவுக்கு இது உதவும்.
 
“நான் என்னை விரும்பி ஏற்றுக்கொள்கிறேன்!”
 
இதில் மூன்று விதிகளும் கடைப் பிடிக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள்.
 
நொடியில் செயல்
 
“நான் எனும்போது செயலும் பொறுப்பும் உங்களுடையது என்பதை மனம் புரிந்துகொள்ளும். விரும்புதல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதலில்தான் நேர்மறைச் செயல்பாடுகள் நடக்கின்றன. தன்னை நிந்திப்பதையும், தான் நினைத்ததை எண்ணி வருந்துவதையும் இந்தச் செயல்பாடுகள் நேரடியாகக் கையாள்கின்றன.
 
முக்கியமான விதி நிகழ்காலத்தில் உள்ளது. “ஏற்றுக்கொள்கிறேன்” எனும்போது நிகழ வேண்டிய காலம் இந்த நொடி என்பதை உணர்ந்து உங்கள் ஆழ் மனது அதற்கு இசைந்து கொடுக்கிறது. இந்த வாக்கியத்தைச் சொன்ன நொடியே செயல்பாடு தொடங்கிவிடுகிறது.
 
பணக்காரன் ஆவேன் என்றால் எதிர்காலம். அது post dated cheque போல. நல்லது. ஆனால், உடனே செய்ய எதுவுமில்லை என்று உணர்ந்து மனம் இந்த செயல்பாட்டைத் தள்ளிப் போடுகிறது. இதனால், பணக்காரன் ஆவேன் ஆவேன் என்று சொல்பவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால், பணக்காரர்கள் ஆவதில்லை.
 
வருமா,வராதா?
 
நெப்போலியன் ஹில்லும் இதைத்தான் சொல்கிறார். “நான் பண வரவைத் தொடர்ந்து பெற்று வருகிறேன்” என்றால் அது நல்ல அஃப்ர்மேஷன் எனலாம். காரணம் பண வரவுக்கான வேலையை, பணத்தைக் கவரும் வேலையை, பண வரவை முடக்கும் சிந்தனையை எதிர்க்கும் வேலையை உங்கள் ஆழ்மனம் உடனே செய்ய ஆரம்பிக்கிறது.
 
தொடர்ந்து சொன்னால் பணம் வருமா என்ற சிந்தனை வருகிறதா? இதை புரட்டிப் போட்டு யோசிக்கலாம். முதலில் பணம் தொலைத்தவர்கள் எல்லாரிடமும் ஒரு பொதுச் சிந்தனை இருக்கும். அது பணம் பற்றிய ஏதோ ஒரு முரணான, தவறான சிந்தனை. அது தொடர்ந்து பேச்சிலும் செயலிலும் தொடரும்.
 
“நம்ம ராசிங்க. சாண் ஏறுனா முழம் சறுக்கும்.” “நமக்குன்னு ஏதாவது ஒண்ணு கரக்டா வந்து சொதப்பிடும்”. “பணம் வந்தா நிம்மதி போயிடும். நான் இப்ப நிம்மதியா இருக்கேன்”. “பணம் வரும், போகும். அதுவா முக்கியம்?”
 
இப்படி இறுகிய எண்ணங்களைத் தொடர்ந்து வைத்திருக்கும்போது அவை தவறான முடிவுகளையும் தவறான சூழ்நிலைகளையும் கவர்ந்து இழுத்து வரும்.
 
நடக்கும், நடக்காது
 
வாரன் ப்ஃபே உலகின் தலை சிறந்த முதலீட்டாளர். தன் முழு வாழ்க்கையையும் முதலீடு செய்வதையே முழு நேரத் தொழிலாகச் செய்தவர். மிக அழகாக ஒரு உளவியல் கூற்றைப் போகிற போக்கில் சொல்கிறார். தவறான முதலீட்டு முடிவுகளை எடுப்பவர்கள் பயம், பேராசை என்கிற இரண்டு எதிர்மறை உணர்வுகளால் அத்தகைய முடிவுகளை எடுக்கிறார்கள்.
 
இது போல ஆராய்ந்தால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் விதை ஒரு சில அடிப்படையான சிந்தனைகளும் உணர்வுகளும்தான். அஃபர்மேஷன் முறையில் இரண்டையும் திருப்ப முடியும். “ஹூம்.. இதெல்லாம் இனிமே சொல்லி என்னத்தை செய்ய.. இதெல்லாம் நடக்காது !” என்று நினைத்தால் உங்கள் ஆழ்மனம் அதை அப்படியே ஏற்று அஃபர்மேஷனுக்கு எதிராக வேலை செய்யும்.
 
அனாயாசமான தாண்டல்
 
“என்னால் முடிகிறது”, “என்னால் முடியாது” என்று இரண்டு வாக்கியங்களில் எந்த ஒன்றையும் உணர்வுபூர்வமாக நம்பிச் சொல்லும் போது அது பலிக்கிறது. அதனால் தான் ஒரே வேலையை, ஒரே சவாலை இரண்டு பேர் முயலும்போது ஒருவரால் செய்ய முடிகிறது. இன்னொருவரால் செய்ய முடியாது. மனம் ஒரு அடிமை. உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப அது செயல்படும்.
 
ஆறு அடி தாண்ட முடியுமா என்று கேட்டால் ‘கஷ்டம்தான்’ என்று பதில் வரும். தாண்டிப்பார்த்தால்கூட முடியாது. ஆனால், இரவில் ஒரு நாய் துரத்துகையில் அதே ஆறு அடி அளவுள்ள பள்ளத்தை “தப்பிக்கிறேன், தாண்டுகிறேன்” என்று எண்ணங்கள் தருகிற வலிமையில் அனாயாசமாகத் தாண்டுவீர்கள்.
 
சாதாரண மனிதர்கள் அசாதாரண செயல்களைச் செய்வது இந்த நம்பிக்கையில்தான். உங்கள் பிரச்சினைகளை எழுதுங்கள். வாக்கியங்களைப் படித்து அதில் உள்ள எதிர்மறைச் சிந்தனையை நேர்மறை சுய வாக்கியங்களாக மூன்று விதிகளை நினைவில் வைத்துக்கொண்டு மாற்றி எழுதுங்கள். அவற்றை ஒரு வாரம் மந்திரம்போல ஜபித்து வாருங்களேன்.
 
மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!

குணம் தரும் நேர்மறைச் சிந்தனை

எண்ணம்தான் வாழ்க்கை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதில் நல்ல செய்தி என்னவென்றால் எண்ணம் மாறக்கூடியது. மாற்றக்கூடியது. அதனால், எண்ணத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளும் மாறக்கூடிவை. மாற்றக்கூடிவை. சுருக்கமாகச் சொன்னால் வாழ்க்கை மாறக்கூடியது. மாற்றக்கூடியது.
 
விதைகளாய் எண்ணங்கள்
 
நம் சித்தாந்தங்களும் நம்பிக்கைகளும் சில எண்ணங்களில் உருவானவை தானே? ஜெர்மானிய இனம் தான் உலகை ஆளத்தக்க இனம் என்ற ஹிட்லரின் எண்ணம்தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற முக்கியமான காரணமானது. இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற ஜின்னாவின் எண்ணம் பாகிஸ்தானை உருவாக்கியது.
 
தேர்தல் அரசியலில் பகுத்தறிவுக் கொள்கைகளிலிருந்து கட்சி நுழைந்தால் திசை திரும்பிவிடும் என்ற ஈ.வெ.ரா.வின் எண்ணம் தான் திராவிடர் கழகத்தை அதிகாரத்தில் ஏற்றாமல் வைத்திருந்தது. அதற்கு மாறாக, தேர்தல் அரசியல் தான் திராவிடக் கொள்கைகளைச் செயல்முறைப்படுத்த உதவும் என்ற அண்ணாவின் எண்ணம் தான் தி.மு.க.வை அரியணையில் ஏற்றியது.
 
பெரிய நட்சத்திரங்களை நாடாமல் புது நடிகர்களை வைத்து நல்ல கதைகளை இயக்கினால் மக்கள் ஏற்பார்கள் என்ற கே.பாலச்சந்தரின் எண்ணம்தான் பல புதிய நடிகர்களை அறிமுகப்படுத்த வைத்தது. (பின்னாளில் அவர்களில் பலர் அவரே பயன்படுத்த முடியாத அளவுக்குப் பெரிய நடிகர்கள் ஆனார்கள் என்பது தனிக் கதை!)
 
சிலரின் முக்கியமான எண்ணங்களே வரலாற்றின் விதைகள்.
 
திருப்புமுனைகளாய்..
 
அதே போல, பலரின் மன மாற்றங்கள் வரலாற்றின் திருப்புமுனைகள். உலக வரலாறு மட்டுமல்ல, உங்கள் வரலாற்றையே எடுத்துக்கொள்ளுங்கள். மாறிய எண்ணம்தான் வாழ்க்கைப் போக்கையே திருப்பியிருக்கும். ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு எண்ணத்தின் பிரதிபலிப்புதான்.
 
உங்கள் எண்ணம் உங்கள் உணர்வையும், உங்கள் நடத்தையையும், உங்கள் உறவையும், உங்கள் உடலையும் பாதிக்கிறது என்றால் அந்த எண்ணத்தை நீங்கள் மாற்றினால், மற்ற அனைத்தையும் மாற்ற முடியும் அல்லவா?
 
முடியும் என்று எனக்கு முழுவதுமாக புரிய வைத்தவர் லூயிஸ் ஹே.
 
வெற்றிச் சின்னமாய் லூயிஸ்
 
ஒன்றரை வயதில் தந்தை, தாயைப் பிரிகிறார். தாயை மணந்தவரும் கடுமையாக நடந்து கொள்கிறார். ஐந்து வயதில் பக்கத்து வீட்டுக் கிழவன் பாலியல் பலாத்காரம் செய்கிறான். 15 வயதில் கர்ப்பம். பிள்ளையில்லா தம்பதியிடம் கொடுத்துக் குற்ற உணர்ச்சியுடன் பிரிகிறார். படிக்காததால், கிடைத்த வேலைகளைச் செய்கிறார். மெல்ல மெல்ல ஒரு மாடல் நடிகை ஆகிறார். தாயை விட்டுப்பிரிகிறார்.
 
புகை, மது, பல ஆண்களுடன் உறவு எனச் செல்லும் வாழ்க்கை ஒருவருடன் திருமணம் என்ற திருப்புமுனையை அடைகிறது. 14 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் உலகம் சுற்றி வருகிறார். வாழ்க்கை வசப்படுகையில் இன்னொரு பெண்ணை மணக்க ஆசைப்பட்டு இவரைப் பிரிகிறார் கணவர்.
 
இறை வழியில் கிறிஸ்துவப் பாடங்கள் அவரை வழி மாற்றுகின்றன. தேவாலயத்திலேயே பாடம் எடுக்கும் அளவு வளர்கிறார். மனதுக்கும் நோய்களுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து புத்தகம் எழுதுகிறார். இணை மருத்துவ முறைகளைக் கற்கிறார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்குப் புற்றுநோய் என்று தெரியவருகிறது. மருத்துவர்கள் கையை விரிக்கின்றனர்.
 
உடைந்து போகிறார். பின் தான் கற்றதையும் எழுதியதையும் போதித்ததையும் தன் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துகிறார். தன் மனதில் உள்ள இறுகிப்போன எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளியேற்றுகிறார். தாயைத் தேடிச் சென்று மீண்டும் இணைகிறார். தாயையும் சுகப்படுத்துகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு பரிபூரண அமைதியை உணர்கிறார்கள்.
 
புற்று நோய் குணமாகிறது. தொடர்ந்து புத்தகங்களும் கருத்தரங்குகளும் உலகின் நூற்றுக்கணக்கான மொழிகளில் வெற்றி பெறுகின்றன. தாய் மனநிறைவுடன் இயற்கை எய்துவதற்கு விடை கொடுக்கிறார்.
 
80 வயது கடந்தும் இன்றும் மிகுந்த ஆரோக்கியத்துடனும், துள்ளலும், நகைச் சுவையுடனும், தெளி வான அறிவுடனும் ஆற்றலுடனும் செயல்பட்டு வருகிறார் லூயிஸ் ஹே!
 
ark2_2433009a.jpg
 
எண்ணமும் நோயும்
 
அவரின் எழுத்துக்கள் பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கின்றன. அப்படிப் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன்.
 
எனக்கு ரெய்கி சொல்லித்தந்த ஆசான் அஃபர்மேஷன்ஸ் என்ற ஒரு நேர்மறை சிந்தனை முறை கொண்டு உடல் சார்ந்த எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம், கட்டுப்படுத்தலாம் என்று கூறியபோது முழுவதுமாக நம்ப முடியவில்லை.
 
அது எப்படி எண்ணத்தை மாற்றியே நோயைக் குணப்படுத்துவது? அப்படி என்றால் எல்லாரும் எல்லா நோய்களையும் குணப்படுத்திக் கொள்ளலாமே? அப்படி என்றால் டாக்டர் எதற்கு, ஆஸ்பத்திரி எதற்கு? இப்படித்தான் எனது எண்ணங்கள் இருந்தன.
 
நான் லூயிஸ் ஹேயின் புத்தகங்கள் படித்தேன். அவரின் சிகிச்சை உத்திகள் எவ்வளவு அறிவியல் பூர்வமானவை என்று உணர்ந்தேன். முதலில், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பயன்படுத்தினேன். பிறகு, இதை என் மற்ற வழிமுறைகளுடன் சேர்த்து மற்றவர்களுக்கும் அளித்தேன்.
 
பிறகு பயிற்சி வகுப்புகளிலும் உளச் சிகிச்சைகளுக்கும் தீவிரமாகப் பயன்படுத்தினேன். இதைப் பயன்படுத்தியவர்கள் தந்த குறிப்புகளும் செய்திகளும் என்னை மேலும் நிபுணத்துவம் பெற வைத்தன.
 
தீராத பல உடல் உபாதைகளை நேர்மறைச் சிந்தனை மூலம் குணமாக்க முடிந்தது. Metaphysical Medicine, Mind- Body Medicine, Quantum Healing எனப் பல சிகிச்சை முறைகளுக்கு Affirmations களுக்கு உள்ள தொடர்பு புரிந்தது.
 
உங்கள் உடல் சுகவீனங்களை உங்கள் எண்ணங்கள் மூலம் மாற்றிச் சுகமளிக்கும் வழிமுறை என்ன என்று விளக்கப் போகிறேன். திறந்த மனதுடன் தயாராகுங்கள்!

தவறான முடிவும் சிந்தனைத் திரிபும்

நமது எண்ணங்கள் பிரச்சினைகளைத் திரித்துப் பார்ப்பதன் மூலம் நம்மைப் பற்றிய எண்ணத்தையும் பிறரைப் பற்றிய எண்ணத்தையும் அதற்கேற்ப மாற்றி யோசிக்கலாம்.
 
காரணங்கள்
 
மகனின் நடத்தை சரியில்லை என்று பள்ளியில் பெற்றோரை அழைக்கின்றனர். மகன் செய்த காரியங்களைக் கேட்டுப் பதைக்கிறாள் தாய். உடனே இப்படி நினைத்துக் கொள்கிறாள். “ஒரு அம்மா என்ற முறையில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். இதற்கெல்லாம் நான்தான் காரணம். என்னால் யாரையும் எதையும் செய்ய வைக்க முடியாது. எல்லாம் என் தலைவிதி!” இதை Personification என்பார்கள். “எது நடந்தாலும் அதற்கு நான் மட்டும் காரணம்” என்று அர்த்தப்படுத்திக் கொள்வது.
 
மகன் செய்த காரியங்களைக் கேட்ட தந்தை இப்படிப் பேசுகிறார்: “எல்லாரும் சேர்ந்து குட்டிச்சுவராக ஆக்கிட்டீங்க. ஒரு பக்கம் பாட்டி செல்லம், இன்னொரு பக்கம் அம்மா செல்லம். உருப்படுமா? நான் வேலையா இருந்துட்டேன். உங்க யாருக்காவது பொறுப்பு வேண்டாம்? எல்லாம் உங்களாலதான்!” எது நடந்தாலும் அது பிறராலே என்று எண்ணுதல். பிறரைக் குற்றம் சொல்லும் ஒரு சிந்தனைத் திரிபு.
 
இரண்டு திரிபுகள்
 
தன்னைக் குற்றவாளியாகப் பார்ப்பவர்கள் “நான் சரியில்லை. நீங்கள் சரி” என்ற மனநிலைக்கு எளிதில் சென்று தங்கிவிடுவர். இந்த நிலைப்பாட்டில்தான் எல்லாவற்றையும் நோக்குவார்கள். இவர்களை துக்க நோய் எளிதில் தாக்கும்.
 
பிறரை குற்றவாளியாகப் பார்ப்பவர்கள் “நான் சரி; நீங்கள் சரியில்லை”என்ற மன நிலையில் அழுத்தமாகத் தங்கி விடுவார்கள். அந்த நிலைப்பாடு அவர்களைக் குற்ற உணர்வின்றித் தவறிழைக்க வைக்கும். பிறர் மீது வன்முறை செலுத்த நியாயம் கற்பிக்கும்.
 
இரண்டும் சிந்தனை திரிபுகள்தான். குற்றப்படுத்துதல்தான் மையக்கரு. யாரையும் குற்றம் சொல்லப் பார்க்காமல் தர்க்கரீதியாகப் பிரச்சினையை அணுகுவதுதான் மனப்பக்குவம்.
 
மாறும் மதிப்பீடுகள்
 
நம்மை மிகவும் வருத்தும் இன்னொரு சிந்தனைச் சிக்கல் “இது இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று நினைப்பது. Shoulds and Musts என்பார்கள். இவைதான் உறவுகளை நசுக்கும் எதிர்பார்ப்பு ஆயுதங்கள். மேம்போக்காகப் பார்த்தால் மிக இயல்பாகவும் சரியாகவும் தோன்றும் இந்த எதிர்பார்ப்புகள்தான் உறவில் பெரிய விரிசல்களை ஏற்படுத்தும்.
 
நம் குடும்பம், சமூகம், கல்வி, கலாச்சாரம் போன்றவை ‘ஒழுங்கு’ என்ற பெயரில் சில எதிர்பார்ப்புகளை வளர்க்கின்றன. ஆனால், அவை அனைத்தும் காலப்போக்கில் மாறிக்கொண்டே வருபவை. கடந்த கால மதிப்பீடுகளை வைத்துக்கொண்டு இறுக்கமாக எதிர்நோக்கும் போது அங்கு உறவுகள் பாதிக்கப் படுகின்றன.
 
விளக்கு வைத்த பிறகு பெண்கள் வெளியே செல்லக் கூடாது என்றார்கள் ஒரு காலத்தில். இன்று அலுவலகத்தில் இரவு நேரத்தில் பணியாற்ற வீட்டிலேயே அனுப்பி வைக்கும் இயல்பு நிலை வந்துவிட்டது. இப்படி நிறையச் சொல்லலாம்.
 
மூலகாரணம்
 
டாக்டர்கள் விளம்பரம் செய்யக் கூடாது. பிராமணர்கள் அசைவம் சாப்பிடக் கூடாது. ஆண்மகன் அழக் கூடாது. இதில் சரி, சரியில்லை என்று விவாதிப்பதைவிட மாற்றங்களை எப்படிக் கையாள்கிறோம் என்பதுதான் விஷயம்.
 
“ஆயிரம் இருந்தாலும் அவன் ஆம்பளை. சம்பாதிக்கிறாள் என்பதற்காக ஒரு பெண் இப்படி எல்லாம் திருப்பிப் பேசக் கூடாது!”
 
இதில் யார் என்ன பேசினார்கள் என்ன பிரச்சினை என்பது போய்விட்டது. பாலின அரசியல் வந்துவிட்டது. அதற்குக் காரணம் பெண் பற்றிய “இப்படித்தான் இருக்க வேண்டும்!” என்ற எண்ணம்.
 
விவாதத்துக்கு உட்படுத்தக்கூட மனமில்லாத வகையிலான இறுக்கமான சிந்தனைகள்தான் எல்லா விரிசலான உறவுகளின் பிரச்சினையில் மூலகாரணங்கள்.
 
எழுதுங்கள்
 
சரி, உங்களுக்கு என்னவெல்லாம் சிந்தனைத் திரிபுகள் உள்ளன என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? யாரிடமும் பேசக்கூட வேண்டாம். உங்களின் பிரதானப் பிரச்சினைகள் மூன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றைப் பற்றியும் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை, ‘பிரச்சினைக்கு இரண்டு பக்கங்கள்’ என்ற விகிதத்தில் ஆறு பக்கங்கள் எழுதுங்கள். மொழி நடை முக்கியமில்லை. இலக்கணப் பிழைகள் பரவாயில்லை. கையெழுத்து சரியில்லை என்றால் பாவமில்லை. எது முக்கியம் என்றால் மனதுக்கு வருவதைத் தடையில்லாமல் எழுதுங்கள். ஒரே மூச்சில் எழுத முடியாவிட்டாலும் தவணை முறையில் எழுதுங்கள். எழுதி முடித்தவுடன் ஆராயாதீர்கள்.
 
மறுநாள் யாரோ எழுதிய கடிதம் போலப் படியுங்கள். பின் எந்தெந்த வாக்கியங்களில் இப்படிப்பட்ட சிந்தனைத் திரிபுகள் உள்ளன என்று பாருங்கள். அடுத்த கட்டமாக, உணர்வு மிகுதியான வார்த்தைகள் எவை என ஆராயுங்கள். அதன் உள்நோக்கம் என்ன என்று பார்த்துத் தர்க்கரீதியான அறிவுபூர்வமான வாக்கியங்களாக மாற்றுங்கள். நிச்சயம் தெளிவு பிறக்கும்.
 
திரிபுகளின் விதி
 
எல்லா மாற்றங்களுக்கும் பொதுவாக உள்ள விதியை நினைவுபடுத்துகிறேன். எதையும் தெரிந்து பயனில்லை. முயற்சிப்பது முக்கியம். நீச்சல் அடிப்பது எப்படி என்று படித்துத் தெரிந்துகொண்டு பயனில்லை, நீரில் இறங்க வேண்டும்.
 
நாம் செய்த பல தவறான முடிவுகளுக்கு விதை ஒரு சின்னச் சிந்தனைத் திரிபு தான். நம் அன்றாட வாழ்க்கையில் அடுத்தவர் பிரச்சினையை ஆராய்ந்தாலே ஆயிரம் கோணல் சிந்தனைகள் தெரியும்.
 
“படம் படு மோசம். இடைவேளை வரை கூட உட்கார முடியலை. ஒரே தலைவலி.”
 
“அப்போ இடைவேளையோட வந்திட்டீங்களா?”
 
“நீங்க வேற.... பணத்தைக் கொடுத்தாச்சுன்னு முழு படத்தைப் பாக்க வச்சுட்டார் எங்க வீட்டுக்காரர்.. இப்ப அவருக்கு தலைவலி, காய்ச்சல். டாக்டர்க்கு தண்டம் பண்ணது வேற எக்ஸ்ட்ரா !”
 
சுற்றி நடக்கும் உரையாடல்களில் இப்படி நிறைய சுவையான சிந்தனைத் திரிபுகள் கிடைக்கும்.
 
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இத்தகைய திரிபுகளுக்கான உளவியலின் ஆதார விதியை அழகாகச் சொல்லிவிட்டார்.
 
“சிந்தித்துப் பார்த்து
 
செய்கையை மாத்து.
 
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ- தவறு
 
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ!”

வெற்றியை உருவாக்கும் எண்ணங்கள்

வியாபாரத்தில் ஜெயித்தவர்கள் பெரும்பாலும் பல தோல்விகளுக்குப் பிறகுதான் தலையெடுத்திருப்பார்கள். குறிப்பாக, முதல் முறையாகத் தொழில் செய்பவர்கள்...